Tamil

Magazine - Tamil
சமுதாயக் களத்தில் உண்மையாய் வாழ்வோம்!
Monday, Jun 01, 2026

arrow Click to enlarge.

சமுதாயக் களத்தில் உண்மையாய் வாழ்வோம்!

பிரியமான வாலிபர்களுக்கு,

வார்த்தையிலும், செயலிலும் உண்மை உள்ளவராயிருக்கிற இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்!

சிமிர்னா சபைக்கு வரக்கூடிய துன்பங்கள் மற்றும் பாடுகளை இயேசு முன்பதாகவே சொல்வதை வெளி 2:10இல் நாம் பார்க்கிறோம். நீங்கள் 10 நாட்கள் உபத்திரவப்படுவீர்கள் என்பது, 10 விதமான பாடுகளாய் கூட இருக்கலாம் (நீரோ மன்னன் தொடங்கி போர்ச்சுகீசியனுடன் முடிவடைந்த 10 பாடுகளைக் குறிக்கலாம்). கிறிஸ்தவர்களாகிய நாம் துன்பங்களில், பாடுகளில் பாதுகாக்கப்படுவீர்கள் என்ற வாக்குறுதி கொடுக்கப்படவில்லை. ஆனால் நமக்கு வருகிற துன்பத்தின் வழியாக நாம் காக்கப்படுகிறோம். இயேசு ஒருபோதும் நம்மை விட்டு விலகுவதுமில்லை, நம்மை கைவிடுவதில்லை. ஆகையால் நான் பயப்படேன். மனுஷன் எனக்கு என்ன செய்வான்? என்று நாம் அறிக்கையிட்டு மரணபரியந்தம் உண்மையாயிருந்து வாடாத, அழிவில்லாத ஜீவ கீரிடத்தைப் பெற்றுக்கொள்ள கர்த்தர் கிருபைச் செய்வாராக.

கர்த்தருடைய பெரிதான கிருபையால் 2026ஆம் ஆண்டின் தமிழ் மாநில முகாம் சிறப்பாக நடைபெற்றது. தேவனுக்கே மகிமையுண்டாவதாக. இதில், வாலிபர்கள் கூடுகையில் கலந்து கொண்ட 460 வாலிபர்களுக்காக தேவனைத் துதிக்கிறேன். இவ்வாலிபர்கள் கேட்ட ஆண்டவருடைய வசனங்கள், மிஷனெரிகளின் சாட்சிகள் மற்றும் பெற்றுக்கொண்ட ஜெப பாரங்கள் இவற்றின் மூலமாக, இவர்கள் எடுத்த தீர்மானங்களில் நிலைத்து நிற்க நம்முடைய ஜெபங்களில் நினைவுக் கூறுவோம். இம்முகாமிற்காக ஜெபத்தோடு பிரயாசப்பட்ட அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.

மே 28-30 வரை TWR Centre, பரமன்கேனியில் கல்பாக்கம் வட்டார வாலிபர் முகாம் சிறப்பாக நடைபெற கர்த்தர் உதவினார். இம்முகாமிற்காக ஜெபித்து, உழைத்த அனைத்து போதகர்கள் மற்றும் தலைவர்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன்.

1967 ஜூன் 9ஆம் தேதி நமது இயக்கத்தின் முதல் மிஷனெரியாக Rev. ஹேரீஸ் ஹில்டன் அண்ணன், அன்றைய தர்மபுரி மாவட்டத்திலுள்ள பெரியமலை பகுதிக்கு சென்றார்கள். “அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்?” (சகரியா 4:10) என்ற வசனத்திற்கேற்ப, இன்று நாம் 59வது ஆண்டை முடித்து 60ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்க ஆண்டவர் தந்த கிருபைக்காக அவருக்கு நன்றி செலுத்துவோம். இந்த ஜூன் 9ஆம் தேதி பெரியமலையில் நடைபெறவுள்ள நன்றி கூடுகையில் வாய்ப்பு இருக்குமானால், நீங்களும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

மேலும் இந்த மாதம் நடைபெறவுள்ள வாலிபர் கூடுகைகளுக்காக (பெரியமலை, தூத்துக்குடி, அம்பத்தூர், கருங்கல்) ஜெபித்துக் கொள்ளுங்கள். மரணபரியந்தம் உண்மையாய் வாழ்ந்து ஜீவகிரீடத்தைப் பெற்றுக்கொள்ள கர்த்தர் கிருபைத் தருவாராக! ஆமென்.

தேவ கிருபை உங்களோடிருப்பதாக.

கிறிஸ்துவின் பணியில்,

ஜெ. டேனியல் அருள்மணி

 


  View / Download :   June-Kerith2026Tamil.pdf

தரிசனக் களத்தில் வீரியம் காண்போம்!
Friday, May 01, 2026

arrow Click to enlarge.

தரிசனக் களத்தில் வீரியம் காண்போம்!

பேர் சொல்லி அழைக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில், வாலிபர்கள் அனைவருக்கும் எங்கள் அன்பின் வாழ்த்துக்கள்!

“உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்” (யோவேல் 2:28) என்பது கர்த்தர் யோவேலின் மூலம் கொடுத்த தீர்க்கதரிசனம். இந்த தீர்க்கதரிசனம் “தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே நடந்தேறுகிறது” என்பதாக பேதுரு அப். 2:16இல் குறிப்பிடுகிறார். அதன் பின்பு அவர்கள் அனைவரும் தரிசனத்தோடு சுவிசேஷப் பணியை ஆரம்பித்தனர். இதன் விளைவாக “இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அனுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்” (அப். 2:47).

தரிசனம் அல்லது தூரநோக்கு என்பது எதிர்காலத்திற்குரிய இலக்கைக் கொண்டது. ஒரு நிறுவனம் எதிர்காலத்தில் எதை அடைய விரும்புகிறது அல்லது எப்படி உயர்ந்த நிலைக்கு மாற விரும்புகிறது என்பதைக் காட்டும் முன்னோக்கிய ஊக்கம் கொடுக்கும் அறிக்கையாகும். இது வெற்றியின் ஒரு தெளிவான காட்சி. இந்த தரிசனத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் தனக்குள்ளே மட்டும் இதை வைத்துக்கொள்ளாமல் தன்னோடுள்ள மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும். அப்போது அது வளர்ச்சியையும், வெற்றியையும் தருகிறது. VBS Friends Fellowshipஇன் நண்பர்கள் 1959ஆம் ஆண்டு கோவில்பட்டியில் ஒரு வீட்டின் அறையில் சுமார் 25 பேர் ஜெபிக்க கூடினர். ஜெபிக்க கூடி வந்தவர்கள் உள்ளத்தில் கர்த்தர் விசேஷித்த ஆவியை வைத்ததினாலே, திட்டவட்டமான செயலுக்குள் இறங்க கர்த்தரிடமிருந்து அவர்கள் தெளிவான தரிசனம் பெற்றனர். இந்த தரிசனத்தினால் நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு என்றதான இந்த மிஷனெரி இயக்கம் உருவானது. 1967இல் இந்த இயக்கம் முதல் மிஷனெரியை அனுப்பியது. தொடர்ந்து தரிசனத்தோடு ஜெபித்து, செயல்பட்டதினால் இன்றைக்கு மாபெரும் இயக்கமாக வளர்ந்துள்ளது.

“கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கைக்குத் தரிசனமும், தாகமும் இன்றியமையாத இரண்டு” என்பது லியோனார்டு ரேவன்ஹில் அவர்களின் பொன்மொழி. இதற்கு நெகேமியாவை முன் மாதிரியாக எடுத்துக் கொள்ளலாம். இவர் ஜெபிக்கும் தலைவர்களில் தலைசிறந்தவர்களில் ஒருவர். கர்த்தர் மேலிருந்த தன் முழு நம்பிக்கையினால் செய்ய முடியாது என்று தோன்றின கடினமான வேலைகளையும் கூட செய்து நிறைவேற்றினார். அவருடைய ஜெபம், தியாகம், கடின உழைப்பு, விடாப்பிடியான உறுதி அனைத்தும் கர்த்தர் அலங்கத்தை கட்டக் கொடுத்த தரிசனத்தை நிறைவேற்றுவதற்கு உதவியது.

பிரியமான வாலிபர்களே! உங்கள் எதிர்காலத்தைக் குறித்த தரிசனம் உங்களுக்கு இருக்கிறதா? அப்படி எந்த தரிசனமும் எனக்கு இல்லை என்ற நிலையில் இருப்பீர்களானால், உங்கள் எதிர்காலத்தை கர்த்தரிடத்தில் அர்ப்பணியுங்கள். சுவிசேஷத்தை இந்தியர்கள் அனைவருக்கும் அறிவிக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உண்டு என்பதை மறந்து போகவேண்டாம். நீங்கள் தரிசனம் பெற்றால் களத்தில் வீரியம் காண கர்த்தர் உதவி செய்வார்.

இம்மாதம் 21 - 24 ஆகிய நாட்களில் சேலம், டேனிஷ்பேட்டையில் நடைபெறும் மாநில முகாமில் வாலிபர்களுக்கு தனி கூடுகை உண்டு. இம்முகாமிற்கு நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் நண்பர்கள், சபை மக்கள், உறவினர்களோடு வந்து கலந்து கொள்ளுங்கள் என்று அன்போடு அழைக்கிறோம். இம்முகாமிற்கு உங்களது வரவை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

தேவ கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்!

கிறிஸ்துவின் பணியில்,

ஜெ. டேனியல் அருள்மணி


  View / Download :   May-Kerith2026Tamil.pdf

செயல் களத்தில் ஜீவனை அர்ப்பணிப்போம்!
Wednesday, Apr 01, 2026

arrow Click to enlarge.

செயல் களத்தில் ஜீவனை அர்ப்பணிப்போம்!

உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்!

ஜிம் எலியட்

நமது இயக்கத்தின் முன்னாள் பொது காரியதரிசி திரு. பேட்ரிக் ஜாஷ்வா அண்ணன் அவர்களின் மூன்றாவது மகனாக பிறந்தவர் ஜிம் எலியட். 23 வயதான இவர், தன்னுடைய இளம் வயதை தேவையுள்ள நமது தேச மக்களாகிய ஜார்கண்ட் மாநிலத்தில் வசித்து வரும் மால்தோ மக்களுக்காக அர்ப்பணித்தார்.

மால்தோ மக்கள் மலேரியா, காலரா, T.B போன்ற வியாதிகளால் அழிந்துவருவதைக் கேள்விப்பட்ட ஜிம் எலியட், அவர்களுக்கு உதவி செய்திட, அந்த மக்களை அழிவிலிருந்து காப்பாற்றிட தன்னைத் தேவனுக்காக அர்ப்பணித்தார்.

ஜிம் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவர். மேலும், தனது வாழ்க்கையை அனைத்து விதத்திலும் வசதியாக அமைத்துக் கொள்ள வாய்ப்புகள் இருந்தபோதிலும், அவற்றையெல்லாம் விரும்பாமல், மால்தோ மக்களின் நல்வாழ்விற்காக தன்னுடைய ஜீவனை அர்ப்பணித்தார். ரோமர் 12:1இன்படி தேவனுடைய இரக்கத்திற்கு பதிலளிக்கும் விதமாக ஜிம் தன்னை ஜீவபலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்தார்.

கிறிஸ்தவர்களாகிய நமக்கு முதலும், முக்கியமானதுமான பணி எது? நமது சரீரங்களைத் தேவனுக்கு ஜீவபலியாக ஒப்புக்கொடுப்பதுதான். பவுல் சரீரம் என்று சொல்லும்போது நமது ஆவி, ஆத்துமா, சரீரம் என்ற முழு மனிதனையும் குறிப்பிடுகிறார். நாம் ஒப்புக்கொடுக்க வேண்டிய சரீரம் ஜீவனுள்ளதாக, கறையற்றதாக இருக்க வேண்டும். தேவனுடைய இரக்கத்திற்குப் பதிலளிக்கும் விதமாக நாம் நமது சரீரங்களை ஜீவபலிகளாக ஒப்புக்கொடுக்க வேண்டும். ஏனென்றால், இயேசுகிறிஸ்து தமது சரீரத்தை நமக்காகப் பலியாக ஒப்புக்கொடுத்தார். இதுதான் தேவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் ஆவிக்குரிய ஆராதனை. இப்படிப்பட்ட பலி அவருக்கு பரிசுத்தமும், பிரியமுமாயிருக்கும்.

அன்பான வாலிபர்களே! அவர் நமக்காக செய்திருப்பதுடன் ஒப்பிட்டு பார்த்தால், நாம் அவருக்காக செய்வதெல்லாம் மிகமிகக் குறைவே! எனவே, நீங்கள் இந்த இளம் வயதில் ஜீவனை அவருக்கென்று அர்ப்பணியுங்கள்.

LEAD Training Programme மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆண்டவருடைய கிருபையால் 55 வாலிபத் தலைவர்கள் பங்கு பெற்று பயனடைந்தனர். மார்ச் மாதம் பம்மல் பகுதியில் புதிதாக Youth Fellowship ஆரம்பிக்க கர்த்தர் கிருபைச்செய்தார். மே 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை சேலம், டேனிஷ்பேட்டை பெத்தேல் வளாகத்தில் நடைபெறவுள்ள தமிழ் மாநில முகாமிற்காக ஜெபியுங்கள். இந்த ஆண்டு சுமார் 1000 வாலிபர்கள் கலந்துக்கொள்ள வேண்டும். உங்களை அன்புடன் அழைக்கிறோம். உங்கள் நண்பர்களையும் அழைத்து வாருங்கள்!

கர்த்தர்தாமே உங்களை அபரிமிதமாய் ஆசீர்வதிப்பாராக. ஆமென்!

கிறிஸ்துவின் பணியில்,

ஜெ. டேனியல் அருள்மணி


  View / Download :   Apr-Kerith2026Tamil.pdf

சபைக் களத்தில் சீஷத்துவம் காண்போம்!
Sunday, Mar 01, 2026

arrow Click to enlarge.

சபைக் களத்தில் சீஷத்துவம் காண்போம்!

என் பின்னே வாருங்கள் என அழைக்கும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்!

ஆஸ்திரேலியாவின் செழிப்பில் வளர்ந்த கிளாடிஸ், தன் எதிர்காலத்தைக் குறித்து திட்டமாக முடிவெடுக்க கர்த்தர் பல வசனங்கள் மற்றும் அவளது பணியின் மூலமாக உறுதிபடுத்தினார். கர்த்தரின் விருப்பத்தைப் புரிந்துக்கொண்ட கிளாடிஸ், ஓய்வு நாள் பள்ளி ஆசிரியையாகவும், வாலிப ஊழியங்களில் பகுதி நேரமாகவும் பணிச் செய்தாள். இவ்வாறு எதைச் செய்தாலும் இதைக் கர்த்தருக்காக செய்கிறேன் என்ற உணர்வுடன் செயல்பட்டாள். இதுதான் கிளாடிஸ் ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவிலுள்ள ஒடிசா மாநிலத்திற்கு வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

வரி வசூலிக்கும் பணியைக் கவனமாகச் செய்துகொண்டிருந்த மத்தேயுவைப் பார்த்து இயேசு: “எனக்கு பின் சென்று வா” (மத். 9:9) என்று கூப்பிட்டார். இயேசுவின் இந்த முதல் அழைப்பு அவரைப் பின்தொடரவும், அவரோடிருந்து அவரை அறிந்துக் கொள்வதுமேயாகும். இப்படிப்பட்ட உறவை அவரோடு கொள்வதற்கு தான் சீஷனாக அழைக்கிறார். சீடத்துவம் என்பது அவருக்கு பின் செல்வதேயாகும்.

“சீடர்கள் தன்னலமின்றி நடக்கவே கிறிஸ்துவின் பாடசாலையில் முதலாவது கற்றுக்கொள்ள வேண்டும்” என வேத அறிஞர் மேத்யூ ஹென்றி கூறுகிறார். சுயத்திற்குச் செத்துக்கொண்டே இருப்பதுதான் ஒரு சீடனின் அனுதின கடமையாகும். அதுதான் இயேசு காட்டிய மாதிரி. இவ்வாறு சிலுவைக்கு “ஆம்” என்று கூறி சுயத்திற்கு “இல்லை” என்பதுதான் சீடத்துவம். சிலுவைக்கு “ஆம்” என்பது, சுயத்திற்கு “இல்லை” என்பதைவிடக் கடினம். இரண்டையும் செய்தால்தான் கிறிஸ்துவுக்கு உண்மையான சீடனாய் இருக்க முடியும். கிளாடிஸ் கிரகாம் ஸ்டெயின்ஸ் சுயத்திற்கு “இல்லை” என்று சொல்வதில் உறுதியாகிவிட்டார்கள். இதை வாசிக்கும் வாலிபர்களே! நீங்கள் எப்போதும் இயேசுவைப் பின்பற்றும் சீஷனாயிருங்கள்.

பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி நடைபெற்ற மிஷனெரி நேர்முகத் தேர்வில் 12 பேர் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். தொடர்ந்து உங்களுடைய ஜெபங்களில் இவர்களை நினைத்துக் கொள்ளுங்கள். கர்த்தருக்கு சித்தமானால் மார்ச் 7, 8 ஆகிய தேதிகளில் இறைவனின் தோட்டம் பூண்டியில் நடைபெறவிருக்கும் LEAD TRAININGஇல் வாலிபர் மத்தியில் ஊழியம் செய்ய உங்களுக்கு வாஞ்சையிருக்குமாயின், இக்கூடுகையில் கலந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

தேவக் கிருபை உங்களோடிருப்பதாக.

கிறிஸ்துவின் பணியில்,

ஜெ. டேனியல் அருள்மணி


  View / Download :   Mar.-Kerith2026Tamil2.pdf

ஊழியக் களத்தில் பரிசுத்தம் காண்போம்!
Sunday, Feb 01, 2026

arrow Click to enlarge.

ஊழியக் களத்தில் பரிசுத்தம் காண்போம்!

பரிசுத்தமுள்ளவரும், பரிசுத்தத்திற்கென்று அழைத்தவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேரீத் பத்திரிக்கையை வாசிக்கிற வாலிபர்கள் அனைவருக்கும் கிருபையும், சமாதானமும் உண்டாவதாக.

“உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல,

நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.” (1 பேதுரு 1:15)

கர்த்தர் பரிசுத்தமுள்ளவர், அதனால் அவருடைய மக்களும் பரிசுத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதை இந்த வசனத்தின் மூலம் பேதுரு கூறுகிறார். ஏனென்றால் பரிசுத்தம் என்பது இவ்வுலகில் காணப்படும் பாவத்தை விட்டுவிட்டு கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, அவரை ஏற்றுக்கொண்டு, அவரை ஆராதிக்கும் ஒரு பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கை வாழ்வதாகும். ஆனால் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் என்று சொல்லியும், நாம் ஏன் பாவத்தில் விழுந்து எழுந்திருக்கிறோம்? ஏனென்றால் இரட்சிக்கப்படும்போது நாம் பாவத்தின் தண்டனையிலிருந்து விடுதலை பெறுகிறோம். பாவத்தின் பிரசன்னத்திலிருந்து விடுதலை என்பது கிறிஸ்துவோடு வாழும் எதிர்கால வாழ்க்கையாகும். இப்போது நாம் பாவத்திலிருந்து விடுதலைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். நாம் பாவ சோதனையின் வழியாகவும், பாவம் செய்யக் கூடியதான சூழ்நிலை வழியாகவும் கடந்து வந்தாலும் பரிசுத்த ஆவியானவரின் துணையைக் கொண்டு பாவத்தை மேற்கொள்ள முடியும் (1 யோவான்2:1; 3:6).

வாலிப நாட்களில் பல பாவ வழிகளில் நடந்து, கள்ள உபதேசங்களைக் கேட்டு, இயேசுவை விட்டு தூரம் சென்று வாழ்ந்தவர் அகஸ்டின். ஒரு நாள் பூங்கா ஒன்றில் தனிமையாக பல மன குழப்பங்களோடு உட்கார்ந்திருக்கும்போது ரோமர் 13:12 என்ற வசனத்தை “எடுத்து வாசி” என்ற சத்தத்தைக் கேட்டு வேதத்தை திறந்து படித்தார். உடனே, அவர் தன் வாழ்க்கையில் செய்த தவறுகளை அறிக்கையிட்டு இயேசுவிடம் மனந்திரும்பினார். பின்னர், அவர் அநேக பாவிகளைக் கிறிஸ்துவிடம் கொண்டுவருகிற பரிசுத்த அகஸ்டினாக மாறினார். அவருடைய பாவ அறிக்கையில் அவர் சொன்னது: “இயேசுவே உம்மை நான் புரிந்துக் கொண்டு அன்பு செய்வதற்கு எவ்வளவு பின்தங்கி விட்டேன். நீர் எனக்குள் இருந்தீர், ஆனால் நானோ வெளி உலகத்தில் அலைந்து திரிந்துக் கொண்டிருந்தேன். நீர் என்னோடு இருக்க, நான் உம்மோடு இல்லாதிருந்தேன். இப்போது உம் மீது மட்டுமே எனக்கு பசியும், தாகமும் உள்ளது. நீர் தரும் உண்மையான அமைதிக்காக நான் ஏங்கி நிற்கிறேன்.”

வாலிபர்களாகிய நீங்கள் எத்தனை பேர் இயேசுவின் அன்பை விட்டுவிட்டு, ஏதோ ஒருவருடைய அன்புக்காக ஏங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள், உங்களை சற்று ஆராய்ந்துப் பாருங்கள். “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக” (மத். 22:37) என்ற வசனத்தின்படி இயேசு உன்னை அவரோடு நெருங்கி வாழ்ந்து பாவத்தை விட்டு முற்றிலும் அவருக்காக பரிசுத்தமாய் வாழ அழைக்கிறார். நீ வாழும் இடம், படிக்கும் இடம் மற்றும் வேலை பார்க்கும் இடமே உன்னுடைய ஊழியக்களமாகும். இந்த ஊழிய களத்தில் பரிசுத்தமுள்ள வாழ்க்கை வாழ உன்னை ஒப்புக் கொடுப்பாயா (ரோமர் 12:1). ஒப்புக்கொடுக்கிற உன்னை பரிசுத்தமுள்ள கர்த்தர் பரிசுத்தப்படுத்துவார்.

“பரிசுத்தமற்ற உலகிலிருந்து, பரிசுத்தமற்ற ஒரு மனிதனை கடவுள் எடுத்து, அவனை பரிசுத்தமாக்கி, மறுபடியும் இந்த பரிசுத்தமற்ற உலகில் வைத்து, பரிசுத்தமாய் காக்கிறாரே அதுதான் அற்புதங்களில் எல்லாம் அற்புதம்.” - லியோனார்டு ரேவன்ஹில்

ஜனவரி மாதத்தில் நடந்த வாலிபர் முகாம்கள் சிறப்பாக நடைபெற கர்த்தர் உதவிச் செய்தார். இதற்காக பாரத்தோடு ஜெபித்து, உழைத்து, செயல்பட்ட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இம்மாதத்தில் லெந்து நாட்கள் ஆரம்பிப்பதால் வாலிபர்கள் உங்கள் பகுதியில் ஒரு மணி நேரமோ அல்லது மூன்று மணி நேரமோ உபவாசமிருந்து குழுவாக தேசத்திற்காகவும், மிஷனெரி பணிக்காகவும் ஜெபியுங்கள். நீங்கள் ஆவிக்குரிய வாழ்வில் வளருவதற்கு இந்நாட்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தேவக் கிருபை உங்களோடிருப்பதாக.

கிறிஸ்துவின் பணியில்,

ஜெ. டேனியல் அருள்மணி


  View / Download :   Feb-Kerith2026Tamil.pdf

>> Archives
2022 (8)
2021 (9)
2016 (12)
2012 (12)