
Monday, Jun 01, 2026
சமுதாயக் களத்தில் உண்மையாய் வாழ்வோம்!
பிரியமான வாலிபர்களுக்கு,
வார்த்தையிலும், செயலிலும் உண்மை உள்ளவராயிருக்கிற இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்!
சிமிர்னா சபைக்கு வரக்கூடிய துன்பங்கள் மற்றும் பாடுகளை இயேசு முன்பதாகவே சொல்வதை வெளி 2:10இல் நாம் பார்க்கிறோம். நீங்கள் 10 நாட்கள் உபத்திரவப்படுவீர்கள் என்பது, 10 விதமான பாடுகளாய் கூட இருக்கலாம் (நீரோ மன்னன் தொடங்கி போர்ச்சுகீசியனுடன் முடிவடைந்த 10 பாடுகளைக் குறிக்கலாம்). கிறிஸ்தவர்களாகிய நாம் துன்பங்களில், பாடுகளில் பாதுகாக்கப்படுவீர்கள் என்ற வாக்குறுதி கொடுக்கப்படவில்லை. ஆனால் நமக்கு வருகிற துன்பத்தின் வழியாக நாம் காக்கப்படுகிறோம். இயேசு ஒருபோதும் நம்மை விட்டு விலகுவதுமில்லை, நம்மை கைவிடுவதில்லை. ஆகையால் நான் பயப்படேன். மனுஷன் எனக்கு என்ன செய்வான்? என்று நாம் அறிக்கையிட்டு மரணபரியந்தம் உண்மையாயிருந்து வாடாத, அழிவில்லாத ஜீவ கீரிடத்தைப் பெற்றுக்கொள்ள கர்த்தர் கிருபைச் செய்வாராக.
கர்த்தருடைய பெரிதான கிருபையால் 2026ஆம் ஆண்டின் தமிழ் மாநில முகாம் சிறப்பாக நடைபெற்றது. தேவனுக்கே மகிமையுண்டாவதாக. இதில், வாலிபர்கள் கூடுகையில் கலந்து கொண்ட 460 வாலிபர்களுக்காக தேவனைத் துதிக்கிறேன். இவ்வாலிபர்கள் கேட்ட ஆண்டவருடைய வசனங்கள், மிஷனெரிகளின் சாட்சிகள் மற்றும் பெற்றுக்கொண்ட ஜெப பாரங்கள் இவற்றின் மூலமாக, இவர்கள் எடுத்த தீர்மானங்களில் நிலைத்து நிற்க நம்முடைய ஜெபங்களில் நினைவுக் கூறுவோம். இம்முகாமிற்காக ஜெபத்தோடு பிரயாசப்பட்ட அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.
மே 28-30 வரை TWR Centre, பரமன்கேனியில் கல்பாக்கம் வட்டார வாலிபர் முகாம் சிறப்பாக நடைபெற கர்த்தர் உதவினார். இம்முகாமிற்காக ஜெபித்து, உழைத்த அனைத்து போதகர்கள் மற்றும் தலைவர்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன்.
1967 ஜூன் 9ஆம் தேதி நமது இயக்கத்தின் முதல் மிஷனெரியாக Rev. ஹேரீஸ் ஹில்டன் அண்ணன், அன்றைய தர்மபுரி மாவட்டத்திலுள்ள பெரியமலை பகுதிக்கு சென்றார்கள். “அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்?” (சகரியா 4:10) என்ற வசனத்திற்கேற்ப, இன்று நாம் 59வது ஆண்டை முடித்து 60ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்க ஆண்டவர் தந்த கிருபைக்காக அவருக்கு நன்றி செலுத்துவோம். இந்த ஜூன் 9ஆம் தேதி பெரியமலையில் நடைபெறவுள்ள நன்றி கூடுகையில் வாய்ப்பு இருக்குமானால், நீங்களும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
மேலும் இந்த மாதம் நடைபெறவுள்ள வாலிபர் கூடுகைகளுக்காக (பெரியமலை, தூத்துக்குடி, அம்பத்தூர், கருங்கல்) ஜெபித்துக் கொள்ளுங்கள். மரணபரியந்தம் உண்மையாய் வாழ்ந்து ஜீவகிரீடத்தைப் பெற்றுக்கொள்ள கர்த்தர் கிருபைத் தருவாராக! ஆமென்.
தேவ கிருபை உங்களோடிருப்பதாக.
கிறிஸ்துவின் பணியில்,
ஜெ. டேனியல் அருள்மணி

Media (Play/View) : 